தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து நடிகராக அறிமுகமாகி பின் பல படங்களில் ஹிட் கொடுத்தவர் விஜய் ஆண்டனி. தனித்துவமான கதையினை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இவரது நடிப்பில் கடந்த மே மாதம் 16 ம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியானது. ரசிகர்களால் மிகப்பெரிய அளவு வரவேற்கப்பட்டு விமர்சனத்திலும் வசூலிலும் மாபெரும் வெற்றியை பெற்றது பிச்சைக்காரன் 2 திரைப்படம். சொல்லப்போனால் விஜய் ஆண்டனி திரைப்பயணத்தில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் அவருக்கு நல்ல ஒப்பனிங்காக அமைந்தது. படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடி மகிழும் தருணத்தில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவு விஜய் ஆண்டனி புது முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி பிச்சைகாரன் 2 தெலுங்கு மொழி பகுதிகளில் விளம்பரத்திற்காக சென்றிருந்த போது, ஆந்திராவில் உள்ள ஜிஎஸ்எல் என்ற புற்றுநோய் மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான மேமோ கிராபி பிரிவை திறந்து வைத்தார். பின் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குழந்தைக்களை சந்தித்து பரிசுகளை வழங்கி அவர்களுடன் பேசி மகிழ்ந்தார் பின் புற்றுநோய் சிகிச்சைக்கு புது முயற்சியாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட யாருக்காவது ஏதேனும் சிகிச்சை தேவைபட்டால் அவரை தொடர்பு கொள்ளலாம். ஜிஎஸ்எல் மருத்துவமனையின் உதவியுடன் இலவச சிகிச்சைக்கான எல்லா முயற்சியும் செய்து தரப்படும் என்று உறுதியளித்தார். இந்த சேவைக்காக 9841025111 என்ற தொலைபேசி எண் அல்லது antibikiligsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டார். இந்த செய்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் இந்த சேவை முயற்சியை வீடியோவாக வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம். தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஆந்திராவில் விஜய் ஆண்டனி ஆதரவற்றோர் நட்சத்திர ஹோட்டலில் உணவு பரிமாறி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.