தளபதி விஜய் உடன் புதிய படத்தில் இணைவதற்கான திட்டம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பேசியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இதனை அடுத்து தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாக இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கிறார் தளபதி விஜய். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனராக மிகத் தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடைசியாக கடந்த மார்ச் மாதம் இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த சில மாதங்களில் விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளிவர இருக்கிறது. இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் முதல்முறையாக இயக்குனர் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் தயாராக இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் இதன் படபிடிப்பு குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வடசென்னை 2 திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்ற தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கான காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில் பத்திரிக்கையாளர் ஒருவர், “சமீபத்தில் நடிகர் விஜய் ஒரு நிகழ்ச்சி ஒன்று நடத்தினார். அதில் அதில் உங்களுடைய அசுரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை குறிப்பிட்டு பேசினார். கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசினார், அதனுடைய படைப்பாளி நீங்கள் தான்.. இந்த மாதிரி ஒரு பெரிய படைப்பாளியும் ஒரு மாஸ் நடிகரும் இணைந்தால் நன்றாக இருக்கும் அது நடக்குமா? அவருக்கு ஏதாவது கதைகள் சொல்லி இருக்கிறீர்களா? என கேட்டபோது, “இல்லை நாங்கள் இரண்டு பேருமே ரொம்ப நாட்களாக பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். விஜய் சார் ரெடியாகத் தான் இருக்கிறார். நான் இந்த கமிட்மெண்ட் எல்லாவற்றையும் முடித்துவிட்டு கண்டிப்பாக செய்வேன். அந்த நேரத்தில் நான் சொல்லக்கூடிய கதைகள் அவருக்கு பிடித்திருந்தால் நிச்சயமாக அதை பண்ணுவோம்.” என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கின்றனர்.