தனக்கென தனி பாணியில் ஒட்டுமொத்த ரசிகர்களும் விரும்பும் வகையிலான பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனது திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக கஸ்டடி திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தனது திரை பயணத்தில் 22 ஆவது திரைப்படமாக நடிக்கும் கஸ்டடி திரைப்படத்தில் பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அதிரடி போலீஸ் திரைப்படமாக தயாராகும் கஸ்டடி படத்திற்கு SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார்.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து கஸ்டடி திரைப்படத்திற்கு, இசை அமைக்கின்றனர். கஸ்டடி திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023 கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் மே 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த கஸ்டடி திரைப்படத்தின் பாடல்களும் டீசரும் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற மே 5ம் தேதி கஸ்டடி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கஸ்டடி திரைப்படத்தின் ஸ்பெஷலான ஒரு ப்ரோமோஷன் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் இயக்குனர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்தின் டப்பிங் பணிகளுக்காக டப்பிங் ஸ்டுடியோவிற்குள் நுழையும்போது, கையில் பாரதியார் புத்தகத்தோடு நாக சைதன்யா அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ந்து போய் வெளியில் வருகிறார். பின்னர் தனது உதவியாளரிடம் “இவர் இங்கே என்ன செய்கிறார்?” என கேட்க, நாக சைதன்யா தமிழிலும் தான் டப்பிங் பேசுவேன் என உள்ளே அமர்ந்திருப்பதாக உதவியாளர் தெரிவிக்க அதிர்ச்சியோடு உள்ளே நுழையும் வெங்கட் பிரபுவை தமிழில் டப்பிங் பேசி நாக சைதன்யா படாத பாடு படுத்துகிறார். கடைசியில் என்ன செய்வது என்று அறியாமல் குழப்பத்தில் வெங்கட் பிரபு இருக்க, தமிழ் டப்பிங் முழுவதையும் நாக சைதன்யா சிறப்பாக முடித்து விட்டதாக அவரது உதவியாளர் தெரிவிக்க, டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து நாக சைதன்யா மாஸாக வெளியே வருகிறார். கலகலப்பான இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ இதோ…