புகழ்பெற்ற ரேடியோ ஜாக்கியியாக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்து தொடர்ந்து நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலில் நடித்து மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த, RJ.பாலாஜி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வீட்டில் விசேஷம். பாலிவுட்ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ படத்தின் ரீமேக்காக வெளிவந்த வீட்டில் விசேஷம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து அசத்தலான படங்கள் RJ.பாலாஜி நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

இதனை அடுத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் RJ.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே RJ.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை RJ.பாலாஜி பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோவின் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்த சமயத்தில் வெறுத்துள்ளீர்களா? என கேட்டபோது, “ஒவ்வொரு நாளும்… ஒவ்வொரு நாளும் வெறுத்திருக்கிறேன். என் எந்த நண்பர்களுக்குமே நான் நடித்த நண்பன் கதாபாத்திரங்கள் பிடிக்கவே இல்லை. இது முக்கியத்துவம் என்பதை தாண்டி எனக்கு பிடித்திருந்தால் மட்டும் தான் நான் அதை செய்வேன். நான் டிவியில் கூட தொகுப்பாளராக பணியாற்றினேன் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், அது பிடிக்காத சமயத்தில் அதிலிருந்து வெளியில் வந்து விட்டேன். அதேபோல் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்தேன். அப்போது ஆரம்பத்தில் மிகவும் ஜாலியாக இருந்தது. என் அருகிலேயே நடிகர் நடிகைகளை பார்க்க முடிகிறது. அதுவே எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் தான். தீயா வேலை செய்யணும் குமாரு படம் நடிக்கும் போது குஷ்பூ மேடம் வந்தார்கள் குஷ்பூ மேடம் வந்து இருக்கிறார்கள் நமது படத்தை அவர்தான் தயாரித்திருக்கிறார்கள் என மிகவும் ஆச்சரியத்தோடு இருந்தேன். இப்படி பக்கத்தில் இருப்பவர்களை பார்க்கும் ஆச்சரியத்திலேயே ஒரு 15 - 20 படங்கள் போய்விட்டது. முடியும் போது நம்மளுடைய வேலை நன்றாக இல்லையே என தெரிந்த போது அதிலிருந்து விலகி வந்து விட்டேன். அதனால் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்த போது நான் மிகவும் சந்தோஷப்பட்டது இல்லை. ஆனால் அதன் மூலம் பெற்ற நண்பர்கள் வட்டாரத்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ந்தேன். நான் ஒரு ஹீரோவுக்கு நண்பனாக நடித்த போதுதான் எனக்கு ஒரு கௌதம் கார்த்திக் என்ற நண்பர் கிடைத்தார். அதர்வா, ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி இவர்களுடைய நட்பெல்லாம் அந்த ஒரு பயணத்தின் போது தான் எனக்கு கிடைத்தது. இந்த மக்களை தெரிந்து கொண்டதில் நான் சந்தோஷமாக இருந்தேன். ஆனால் அந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷங்கள் இல்லை" என தெரிவித்துள்ளார். RJ.பாலாஜியின் கலகலப்பான அந்த பேட்டி இதோ…