தனக்கென தனி ஸ்டைலில் நடனமாடி நடன கலைஞராக மக்களிடையே பிரபலமடைந்து பின்னர் நடன இயக்குனராக உயர்ந்து தற்போது இந்திய சினிமாவில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்கும் இயக்குனராகவும் முன்னணி ஹீரோவாகவும் திகழ்பவர் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பிலும் திரைக்கதையிலும், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்சன் என்டர்டைனிங் திரைப்படமாக ரிலீஸாக தயாராகியுள்ள திரைப்படம் ருத்ரன். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்கள் முதல் முறை இயக்குனராக களமிறங்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். FIVE STAR CREATIONS LLP நிறுவனத்தின் தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்களின் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகியுள்ள ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ருத்ரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

காஞ்சனா 3 திரைப்படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் திரைக்கு வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த ருத்ரன் படத்தின் ட்ரெய்லர் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கும் நிலையில், தற்போது ருத்ரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை ராகவா லாரன்ஸ் தத்தெடுத்துள்ளார். இது குறித்து அந்த குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் அவர்கள் 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி செலவு மொத்தத்தையும் தான் ஏற்றுக்கொள்ளவதாக மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். முன்னதாக தனது லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு சமூக நல உதவிகளை செய்து வரும் ராகவா லாரன்ஸ் பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் VA.துரை அவர்களின் மருத்துவ செலவிற்கும் உதவியுள்ளார். இந்நிலையில் 150 குழந்தைகளை தற்போது ராகவா லாரன்ஸ் தத்தெடுத்து அவர்களின் கல்வி செலவை ஏற்றிருப்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.