தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட படைப்பாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி பான் இந்திய திரைப்படமாக மிகப்பெரிய வெற்றியை நாடு முழுவதும் பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கவனம் ஈர்த்து சாதனை படைத்தது. லைகா நிறுவனம் உடன் இணைந்து மணிரத்தினம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, அஷ்வின் காக்கமனு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷமி, சோபிதா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த இப்படம் ரசிகர்களுக்கு நெருக்கமான படமாகவே மாறிவிட்டது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. முன்னதாக ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் மிகபெரிய அளவு டிரெண்ட் அடித்த நிலையில் படத்திற்கான விளம்பர வேலையில் படக்குழு தீவிரம் காட்டியுள்ளது.

அதற்காக படக்குழு கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் இரண்டு நாட்களில் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான முன்பதிவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள மிக முக்கியமான காட்சியில் சிறு பகுதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளால் வந்தியத்தேவன் கடத்தப்பட்டு அடிபட்டு காளி கோவிலில் கட்டப்பட்டு கிடக்கும் போது ஆழ்வார்கடியான் நம்பி அவரை காப்பாற்றுகிறார். இறுதியில் ஆதித்ய கரிகாலனை தேடி நம்பி செல்வதாகவும் குந்தவை பிராட்டியை நோக்கி வந்தியத்தேவன் போவதுமாக காட்சி முடிகின்றது. இந்த காட்சி வந்திய தேவன் நம்பிக்குமிடையேயான நகைச்சுவை கிண்டல் தனத்தை சாரமாக கொண்டுள்ளது. முதல் பாகத்திலே இந்த இருவரது கதாபாத்திரம் வரும் காட்சி அதிகம் பேசப்பட்டது. இந்த படத்திலும் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தி, நம்பியாக நடித்த ஜெயராம் இருவருக்குமான கூட்டணி காட்சி அதிகம் பேசப்படும் என்று இந்த காட்சியின் மூலம் தெரியவருகிறது.