சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. சுபாஸ்கரன் அவர்களின் லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் மணிரத்தினம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து அந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் மிக முக்கியமான படமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் அமைந்தது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மிகப்பெரிய அளவு நட்சத்திர பட்டாளம் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் தீனி போட்ட படமாக பொன்னியின் செல்வன் அமைந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாக வெளியானது. உலகமெங்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தற்போது மூன்றாவது நாளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றும் பல பகுதிகளில் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் பொன்னியின் செல்வன் 2 வெளியாகி மூன்றாவது நாளில் உலகமெங்கும் ரூ150 கோடி வசூளித்தததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரூ100 கோடி வசூல் செய்ததாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கோடிகளை வேட்டையாடி வரும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் விரைவில் ரூ 1000 கோடி வசூல் ஈட்டி புது சாதனையை தமிழ் சினிமாவில் பெறுமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இதையடுத்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வசூல் வெற்றியை படக்குழுவினருடன் அப்படத்தின் ரசிகர்களும் அதிகளவு பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.