லைகா ப்ரோடக்ஷன் தயாரிக்கும் அடுத்த புதிய திரைப்படத்தை மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 2018 திரைப்படத்தின் இயக்குனர் ஜூட் அந்தணி ஜோசப் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்திய சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக தரமான திரைப்படங்களை வழங்கி வரும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முன்னதாக இந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் திருவின் குரல் மற்றும் தீராக் காதல் உள்ளிட்ட படங்களும் லைகா தயாரிப்பில் வெளிவந்தன. அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தவரும் இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்து வரும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஸ்போர்ட்ஸ் படமாக தயாராகி வரும் லால் சலாம் படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சுந்தர்.சி யின் அரண்மனை 4 அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்களை தயாரிக்கும் லைகா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தின் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த முக்கிய படைப்பாக உருவாகும் புதிய திரைப்படத்தை மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்த 2018 திரைப்படத்தின் இயக்குனர் ஜூட் அந்தணி ஜோசப் இயக்க இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 2023 ஆம் ஆண்டின் மிக முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த திரைப்படம் 2018 மலையாளத்தில் இயக்குனர் ஜூட் அந்தணி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சகோ போபன், நரேன், ஆசிப் அலி, வினித் ஸ்ரீனிவாசன், லால், அஜு வர்கீஸ், கலையரசன், ஹரி கிருஷ்ணன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கும் இந்த 2018 திரைப்படம், கடந்த 2018 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கதைக்களமாக கொண்டு கேரள மாநிலம் பட்ட துயரங்களை, சந்தித்த சவால்களை கொண்ட மிகச் சிறப்பான ஒரு படமாக வழங்கப்பட்டது. மலையாளத்தில் வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்திருக்கும் இந்த 2018 திரைப்படத்தின் இயக்குனர் தற்போது லைகா ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து இருக்கிறார்.

இந்த புதிய திரைப்படம் குறித்த இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இயக்குனர் ஜூட் அந்தணி ஜோசப் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருப்பதால் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. ஏற்கனவே இப்படத்தில் நிவின் பாலி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வரும் நிலையில் 2018 திரைப்படத்தை தொடர்ந்து மல்டி ஸ்டாரர் படமாக இந்த புதிய திரைப்படமும் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா ப்ரோடுக்ஷனஸின் இந்த அறிவிப்பு இதோ…