நமக்கு பிடித்த நடிகர்களை திரையில் பார்ப்பதே குஷி தான். இதில் நம் ஃபேவரைட் நடிகர்களை இரட்டை வேடத்தில் பார்ப்பது டபுள் குஷி தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி , கமல், அஜித், விஜய், சரத்குமார்,விஜயகாந்த், சூர்யா இப்படி பல நடிகர்களும் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளனர். டபுள் ஆக்ஷன் படத்திற்கென வெற்றி வராலாறு உண்டு. அப்படிப்பட்ட டபுள் ஆக்ஷன் திரைப்படங்கள் பற்றியும் அதில் மறைந்திருக்கும் சுவாரஸ்யங்கள் பற்றியும் தான் இதில் காணப்போகிறோம்.

சிறு வயதில் ஜீன்ஸ் படத்தை பார்த்த 90ஸ் கிட்ஸ் தான் இதற்கு சரியான சாட்சி. நம்மை போல் இன்னொருவன், இன்னொருத்தி இருப்பார்கள் போலயே என்ற தாக்கத்தை நம்மை அறியாது ஏற்படுத்தியிருக்கும்.

கிராபிக்ஸ், கிரீன் மேட், மோஷன் கேப்ச்சர் போன்ற தொழில்நுட்ப வசதிகள் எதுவுமே எட்டிப்பார்க்காத அக்காலத்திலேயே தமிழ் சினிமாவில் டபுள் ஆக்ஷன் சாத்தியமானது. ஆம் 1940-ம் ஆண்டில் பி.யூ.சின்னப்பா நடித்த உத்தம புத்திரன். இதில் இரண்டு பாத்திரத்தில் தங்களின் ஆதர்ஷ நாயகனை பார்த்த ரசிகர்கள் அரங்கத்தை அதிர வைத்தனர். 'தி மேன் இன் தி அயன் மாஸ்க்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலாக இருந்தாலும். அந்த சமயம் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு பலே.

பொதுவாக டபுள் ஆக்ஷன் படங்களில் வரும் ஹீரோக்கள் அண்ணன்- தம்பி, அப்பா- மகன் என்ற ஃபார்முலாவையே கையாண்டனர். அதன் பிறகு அதில் இருக்கும் சூட்சமங்களை அறிந்து ஹீரோ- வில்லன் என்று நடிக்கத்துவங்கினர். டபுள் ஆக்ஷன் என்பது ஒரு அங்கீகாரமாக இருந்தது. இந்த வித்தையை சரியாக கையாளத் தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்றே கூறலாம். அந்த காலத்தில் இவர் நடித்த நாடோடி மன்னன், குடியிருந்த கோவில், எங்க வீட்டு பிள்ளை, நீரும் நெருப்பும் படங்களே அதற்கு சரியான சான்று. தற்போது இருக்கும் ஹீரோக்கள் சரியாக டபுள் ஆக்ஷன் படங்கள் தரவில்லை என்றால், இவர் என்ன பெரிய MGRஆ என்று கிண்டல் செய்வார்கள் ரசிகர்கள்.

டபுள் ஆக்‌ஷனில் வேறொரு பரிமாணத்தை எட்டி, அதில் வெற்ற பெற்றது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இரண்டு ரோல் என்ற வடிவமைப்பை மாற்றி தெய்வ மகன் படத்தில் 3 வேடங்கள் நவராத்திரி படத்தில் 9 வேடங்கள் என உலக சினிமாவிற்கு சவால் விட்டிருப்பார். இவர் கடந்து வந்த பாதையில் தான் உலகநாயகன் கமல் ஹாசனும், சியான் விக்ரம் அவர்களும் பயணிக்கிறார்கள்.

பழங்காலத்தில் டபுள் ஆக்ஷன் காட்சி எடுக்கவேண்டும் என்றால் பெரிய விஷயம். நடிகர்களுக்கு நடுவே தூண் அல்லது சுவர் கொண்டு அந்த காட்சியை எடுப்பார்கள். இப்போது சில வினாடிகளிலேயே அடுத்த கேரக்டரை நடிக்க வைத்து, ஆன்-ஸ்பாட்டில் எடிட் செய்து டேக் ஒகே என்கின்றனர். வருடங்கள் ஆனாலும் வரலாறு மாறாது. டபுள் ஆக்ஷன் என்பது தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட்டுகளில் ஒன்றாகவே இருக்கும். டபுள் ஆக்ஷன் கதைகளுடன் களமிறங்கும் ஒவ்வொரு இயக்குனரும், இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்க்கு சமமானவர்கள்.