உச்ச நட்சத்திரங்களை சமூக கருத்துகளை படத்தில் பேசி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு புகழ் பெற்ற இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியான ரமணா, ஏழாம் அறிவு, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் ஆகிய படங்களில் கருவாக ஒரு சமூக அக்கறை சார்ந்த கருத்து இன்று இருக்கும். அதன்படி பல படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது. தற்போது ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் திரைத்துறையில் இயக்குனராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். இவர் எழுத்தில் திரிஷா நடித்த ராங்கி திரைப்படம் கடந்த ஆண்டு மக்கள் மத்தியில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியை நடிகர் கமல் ஹாசன் திறந்து வைத்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார்.

அவரை தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் கண்காட்சியினை நேரில் சென்று முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் குறித்து வைக்கப்பட்ட நினைவு புகைப்படங்கள் பார்வையிட்டார். பின் பத்திரிகையாளர்களை சந்தித்த ஏ ஆர் முருகதாஸ்,

"நமது தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா மு.க ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய தமிழின தலைவரின் மகனாக இருந்த போதிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியவர் என்பது தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உலகத்தில் வாழும் அத்தனை இந்திய பெரும்தகைகளுக்கும் தெரியும் நாமெல்லாம் அறிந்திருந்த விஷயத்தை இந்த புகைப்பட கண்காட்சியில் வந்து பார்க்கும் போது அவரோட பயணித்த உணர்வை இந்த கண்காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய பிரம்மிப்பையும் மிகப்பெரிய மரியாதையையும் அவர்பால் நமக்கு உண்டாகிறது. இதை தமிழகத்தில் இருக்கும் இளைஞர்கள், மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த வரலாற்று நிகழ்வுகளை பார்த்து மகிழும்படி வேண்டுகிறேன்" என்றார்.

அதனை தொடர்ந்து தமிழகம் தமிழ்நாடு என்ற பிரச்சனையை ஒரு சமூக பிரச்சனையை பேசும் படங்களை இயக்கும் இயக்குனரா நீங்க எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "தமிழகம் - தமிழ்நாடாக மாறியதற்கு எவ்வளவு போராட்டங்கள் இருக்கிறது. அதற்கு பின் உயிர்நீத்த பெருந்தலைவர்கள் இருக்கிறார்கள்.‌ அதை நம் முதல்வர் எளிதாக யாருக்குப் விட்டு தர மாட்டார் என்பதை நாமே சட்டசபையில் பார்த்தோம். அதனால் என்றாக இருந்தாலும் தமிழ்நாடு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை" என்றார்.

அதன்பின் ஒரு இயக்குனரா முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, "இந்த கண்காட்சியினை பார்க்கும்போதே அது தெரிந்தது. ஏனென்றால் 14 வயது இருக்கும்போதே இளைஞர் அணியில் பொறுப்பேற்று அதன்பின் ஒரு தலைவரின் மகனாக பிறந்திருந்தாலும் தனக்கென பல போராட்டங்களை அமைத்து அதில் வெற்றி கண்டு மிகப்பெரிய இடத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த வரலாற்று பதிவுகளை நிச்சயமாக ஒரு பயோபிக்கா இந்தியளவில் எடுக்க முடியும். அதற்கான பிரம்மாண்டங்களும் மனதை பாதிக்கும் சம்பவங்களும் இதில் இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக மிஸா காலத்தில் அவர் அனுபவித்த போராட்டங்கள் துன்பங்கள். எல்லாமே ஒரு நல்ல வரலாற்று படம் எடுப்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த புகைப்பட கண்காட்சி இருக்கிறது." என்றார் ஏ ஆர் முருகதாஸ்.

முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ என்ற படத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி ராமசந்திரன் மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாறு புனைவு செய்யப்பட்டு படமாக்கப் பட்டது. பின் சமீபத்தில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை கதை படமாக்கபட்டது. மேலும் இந்திய அளவு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய முதல்வர் முக ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு படமாக்கம் குறித்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.