நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அருள்நிதி. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டி ப்ளாக், தேஜாவு & டைரி என மூன்று வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் நடித்த நடிகர் அருள்நிதி நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டில் திருவின் குரல் மற்றும் கழுவெத்தி மூர்க்கன் ஆகிய அதிரடி திரைப்படங்கள் வெளிவந்தன. இந்த வரிசையில் அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் டிமான்டி காலனி 2.

பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த டிமான்டி காலனி 2015 ஆம் ஆண்டில் வெளியானது. வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக ரசிகர்களின் பேராதரவு பெற்று வெற்றி பெற்ற டிமான்டி காலனி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமான்டி காலனி 2 திரைப்படமும் தயாராகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்துவிற்கு முதல் படத்திலேயே வெற்றியை தேடித்தந்த டிமான்டி காலனி திரைப்படம் நடிகர் அருள்நிதியின் திரைப் பயணத்தில் மிக முக்கிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிமான்டி காலனி திரைப்படத்தை தொடர்ந்து இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா என பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'டிமான்ட்டி காலனி 2'.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு டிமான்ட்டி காலனி 2 படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி பாண்டி கலை இயக்கத்தில், ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்திற்கு டி. குமரேஷ் படத்தொகுப்பு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் படமான 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்திருப்பதை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த டிமான்ட்டி காலனி 2 பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.