இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசை ஜாம்பவானாகவும் இந்திய நட்சத்திர இசையமைப்பாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்கு இடைவிடாது சிறந்த இசையை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பார்த்திபன் அவர்களின் சாதனை படைப்பாக வெளிவந்த இரவின் நிழல், சீயான் விக்ரம் மிரட்டலான பல கெட்டப்பில் நடித்து அசத்திய கோப்ரா, இயக்குனர் கௌதம் மேனன் - சிலம்பரசன்.TR வெற்றி கூட்டணியின் வெந்து தணிந்தது காடு, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் பாகம் 1 ஆகிய திரைப்படங்களில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தன.

தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் தொடக்கத்தில் சிலம்பரசன்.TR - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல படத்தில் தனது இசையால் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இன்று(ஏப்ரல்28) ரிலீஸான இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மிப்பான பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தில் தன் இசையால் ரசிகர்களை மயக்கியுள்ளார். மேலும் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் படமான அயலான், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள மாமன்னன், மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கும் லால் சலாம் ஆகிய திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார்.

இதனிடையே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மனைவி சாய்ரா ரஹ்மான் அவர்களின் தாய் மொழி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தரமான பதில் கொடுத்துள்ளார். முன்னதாக சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானோடு இணைந்த அவரது மனைவி சாய்ரா, பேசத் தொடங்கிய போது, "ஹிந்தியில் வேண்டாம் தமிழில் பேசவும்" என ஏ.ஆர்.ரஹ்மான் கூற, "மன்னிக்கவும் எனக்கு தமிழ் அவ்வளவு சரளமாக வராது" என ஆங்கிலத்தில் சாய்ரா பேசினார். இந்நிலையில் இதனை குறிப்பிட்டு பேசும் வகையில், “என்னது ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய்மொழி என்ன? வீட்டுல குடும்பத்துல என்ன பேசுவாங்க?” என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதனை குறிப்பிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் "காதலுக்கு மரியாதை" என தன்னுடைய ஸ்டைலில் தரமான பதில் கொடுத்துள்ளார். இசைப்புயலின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது அந்த பதிவு இதோ…