“உலகப் படங்களுக்கு நிகராக தமிழ்ப் படங்கள் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் திரைப்பட வெற்றி விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் வெற்றிபெற்ற திரைப்படத்தில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும், திரைப்படத்தில் உழைத்த கலைஞர்களுக்கும் முதலமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார்.

பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

உலகமெங்கும் பேசப்படும் திரைப்படங்களைத் தருபவர்கள் தமிழ்த் திரையுலகினர் என்றும் முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். நகைச்சுவை படங்களைப் பார்க்கும் போது மனதிலுள்ள கவலைகள் நீங்கும் என்றும், எம்.ஜி.ஆர் போன்று நல்ல கருத்துள்ள படங்களை, சினிமா கலைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தீய கருத்துகளைப் பரப்பும் வகையிலான படங்களை எடுக்க வேண்டாம் என்றும் திரையுலக கலைஞர்களை முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார். அத்துடன், இந்திய சினிமா நூற்றாண்டைக் கடந்திருப்பது மாபெரும் சாதனை என்றும் முதலமைச்சர் பெருமிதத்தோடு கூறினார்.